Pages

Monday, January 3, 2011

கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட நிகழ்ச்சி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பு அமைப்பான இந்தியா-கத்தார் இஸ்லாமியப் பேரவை IQIC யின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 17 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் ஒரு பெரும் மாநாடு போன்று பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பங்கு கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் IQIC என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா-கத்தார் இஸ்லாமிய பேரவையின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் 16 முதல் கத்தாரில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக அய்.கியூ.அய்.சி.யின் சார்பாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி தோஹாவில் உள்ள சவூதி மர்கசில் டிசம்பர் 17 மாலை நடைபெற்றது.மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதினும் 5 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதி குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது.

அய்.கியூ.அய்.சியின் தலைவர் சகோதரர் இஸ்மாயில் நாகூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அய்.கியூ.அய்.சியின் மார்க்கச் செயலாளர் மவ்லவி ஷர்புத்தீன் உமரி திருக்குர்ஆன் முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.அய்.கியூ.அய்.சியின் பொதுச் செயலாளர் மவ்லவி நூருல்லாஹ் பாஷா உமரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அய்.கியூ.அய்.சியின் துணைத் தலைவர் புதுக்கோட்டை மீரான் அறிமுக உரை ஆற்றினார். ஸ்ரீலங்க இஸ்லாமிக் கவுன்சில் அமைப்பாளர் மவ்லவி ஜியாவுத்தீன் மதனி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் தியாகம் என்ற தலைப்பில் முன்னதாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட தமுமுகவின் சவூதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார்.


இதன் பிறகு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இஸ்லாத்தின் எழுச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன்றைய உலகில் அமெரிக்கா முதல் சீனா வரை இஸ்லாம் எவ்வாறு எழுச்சிப் பெற்று வருகின்றது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். இதன் பின் பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் இஸ்லாமும் நான் கடந்து வந்த மதங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஹிந்து மதத்தில் இருந்து தொடங்கி பெரியாரின் தொண்டர் பிறகு பவுத்தம் வரை தான் கடந்து வந்த பாதைகளை விவரித்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் பிறகு 2000 முதல் பத்தாண்டுகள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆய்வுச் செய்து இஸ்லாத்தின் தன்னை இணைத்துக் கொண்டதை விவரித்தார்.

அய்.கியூ.அய்.சியின் மக்கள் தொடர்பு அலுவலர் அறந்தாங்கி ஜாபர் அலி நன்றியுரை ஆற்றினார். அய்.கியூ.அய்.சியின் பொருளாளர் எஸ்.ஹெச். முஹம்மது நாசர், மார்க்க செயலாளர்கள் முஹம்மது நூருல் அமீன், வேலூர் முனீர் பாஷா, அலுவலகச் செயலாளர் பாரூக், மக்கள் தொடர்பு செயலாளர் அரசர்குளம் ஜபருல்லா மற்றும் பாமனி அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாடு போன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கத்தாரில் வாழும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இது வரை காணாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். இந்நிகழ்ச்சி கத்தாரில் வாழும் தமிழ் அறிந்த மக்களிடையே பெரும் பேரழுச்சியை ஏற்படுத்தியது.

கத்தாரில் கடந்த டிசம்பர் 16 அன்று அல்மில்லியன் முகாமில் உள்ள அய்.கியு.அய்.சி. கிளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும், டிசம்பர் 18 அன்று அல்கோரிலும், டிசம்பர் 19 அன்று அல்பனார் பள்ளிவாசலிலும் இரு பேராசிரியர்களும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment